சிற்றின்பம்

அதையே யோசி 
« Back to blog

உணர்வுகள் சிறுகதை - 2

"இந்த போனை பார்க்க பார்க்க எனக்கு ஏக்கமாக இருக்கிறது" என்றாள் என் மனைவி தன் தம்பியிடம். அவர் கையில் அழகாக அடக்கமாக ஒரு மோட்டோ ரேஜர் போன் உட்கார்ந்திருந்தது. தன் ஏக்கத்திற்க்கு காரணம் அந்த செல்பேசி என்னால் உடைக்கப்பட்டு விட்டது என சஸ்பென்ஸை போட்டு உடைத்திருக்கலாம். ஆனால் நீட்டு முழக்கி ரிஷிமூலம் தொட்டு கதை சொல்வதில் என் மனைவி வல்லவள்.

அன்று என் மனைவியின் உறவினர் ஒருவரின் திருமணம். கொண்டாட்டங்கள் முடிய வெகுநேரம் ஆகிவிட்டது. பையன் வேறு தூக்கத்திற்காக அழ ஆரம்பித்தான். நான் மட்டும் அவனைக் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் மாமனார் வீட்டுக்கு புறப்படலானேன். ஏறக்குறைய நடுநிசியை நெருங்கும் நேரம். அன்று போட்டிருந்த நீலக்கலர் பேண்டின் பாக்கெட்டில் எதுவும் வைப்பதில்லை. பாக்கெட் ஆழமாக இல்லாததால் அதில் பைசாவைப் போட்டால் கூட உட்கார்ந்திருக்கும் போது கீழே வந்து விழுந்து விடும்.

வீட்டுக்கு வந்த நெடுநேரம் கழித்து தான் என் செல்பேசியை தேட ஆரம்பித்தேன். எங்கு தேடியும் காணோம். பேண்ட் பாக்கெட்டில் வைத்த ஞாபகம். கட்டாயம் அது ஆட்டோவில் தான் விழுந்திருக்க வேண்டும். இந்த நாட்களில் செல்பேசி இல்லையெனில் உங்கள் கை உடைந்த மாதிரி உணர்ந்திருக்கிறீர்களா? அதுவும் செல்பேசி தொலைந்துப் போனால்? ஒன்றுமே செய்யத் தோனாது.

என்னுடைய எண்ணுக்கு மறுபடியும் மறுபடியும் வேறொரு போனிலிருந்து அழைப்பு விடுக்கிறேன். யாரும் எடுக்க காணோம். கடவுளே! யாராவது போனுக்கு பதில் அளித்தால் நன்றாகயிருக்கும். அவன் காலில் விழுந்தாவது அந்த போனை வாங்கி விடவேண்டும். அதற்குள் எல்லாருக்கும் நான் ஃபோனை விட்ட விசயம் தெரிந்திருந்தது. ஆளாளுக்கு இலவச அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஏறக்குறைய 100 அழைப்புகளுக்கு அப்புறம் அந்த ஆட்டோ டிரைவர் தான் எடுத்தானென நினைக்கிறேன்.

"சார் யாரோ ஒரு அம்மா கூப்பிட்டாங்க அவங்க அரசரடி ஸ்டாண்டுக்கு வந்து வாங்கிட்டுப் போறதா சொல்லீட்டாங்களே சார்"

சட்டென புரிந்தது என் மனைவியின் அழைப்புக்கு கடைசியில் செல்பேசியை எடுத்திருக்கிறான்.


"இல்லேம்மா! போனை பார்த்தா காஸ்ட்லியா ஃபோனா இருக்கும் போல 1000 ரூபாய் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்க"

"இல்லே சார் இது பழைய ஃபோன் தான் வாங்கி ஒன்றை வருசமாச்சி. தெரியாம தானே அவரு போனை விட்டுட்டு போயிருக்காரு. நீங்க காசு கேட்ட் என்ன நியாயம்.

"என்ன பேசுற நீ. இந்த போனை நான் அப்படியே அமுக்கியிருந்தா என்ன செஞ்சிருப்பே நீ. நியாயமான முறையில போலாமுன்னு தான் கேட்கிறேன்"

"1000 ரூபாயெல்லாம் கொடுக்க முடியாதுங்க. அநியாயமா இல்லே"

"சரி 500 ரூபாயவது கொடுங்க"

500 போனாலும் பராவயில்லை என ஆட்டோகாரனின் நேர்மையை 50 ரூபாய் கொடுத்து வாங்கி  விட்டு போனுடன் என் மனைவி வீட்டுக்கு வந்தார்.

சென்னையில் இருக்கும் போது எனக்கு என் மனைவிக்கும் வாடகை வீடு தேடுவது விசயமாக வாக்குவாதம் முற்றியது. வாக்குவாதத்தில் எப்போதுமே நான் வெல்வது கிடையாது. மீசையில் மண் ஒட்டாமல் இருக்க அவளை விட உரத்த குரலில் பேசுவது, பக்கத்தில் இருக்கும் பொருட்களை போட்டு பந்தாடுவது, கையில் கிடைத்தது போட்டு உடைப்பது என்று என் ஆண்மையை நிரூபித்துக்கொள்ளும் தருணங்களை தான் நாடுவேன். அன்று என் கையில் கிடைத்தது ஆட்டோக்காரனிடமிருந்து தப்பி வந்த என் செல்பேசி. வந்த கோபத்தில் கையிலிருந்த செல்பேசி சிதறு தேங்காய் அடித்தேன். இரண்டு துண்டாக உடைந்தது. என் பையன் ஓடிப்போய் உடைந்த பாகத்தை கையில் எடுத்துப் பார்த்தான். விவாதம் இனிதே முடிவுற்றது. இழப்பு?





Loading mentions Retweet

Comments (0)

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter